டீன் ஏஜ் எனும் பத
டீன் ஏஜ் - உங்கள் பிள...
பூப்படைதல் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் நடக்க வேண்டிய மிக முக்கியமான இயற்கை நிகழ்வு. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் அதன் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை படைத்த பெண் உயிரினம் ஒருபடி மேலாக கருதப்படுவது இயற்கையை. அது ஏன் இவ்வளவு புனிதமானது என்றால் பெண் உயிரினம் மட்டுமே ஒரு புது உயிரை பெற்றெடுத்து அந்த உயிரை இந்த உலகத்தில் உலவ விடமுடியும்.
நம் உடலில் உள்ள மற்ற உடல் உறுப்புகள் வளர்ந்து பல மாற்றங்களை அடைவது போல் தான் இதுவும் ஒரு மிக முக்கியமான மாற்றம். நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், கொனடோடிரோபின் ஹார்மோனை (gonadotropin-releasing hormone (GnRH)) சுரக்கச் செய்கிறது. அந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை ஆகியவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இப்படி நடக்கும் இந்த மாற்றமே 11,12 வயதிற்கு மேல் பெண்களின் கர்ப்பப்பை ஒரு கருவை சுமக்கும் அளவிற்கு நன்றாக வளர்ச்சி அடைந்து விட்டது என்பதை இந்த பூப்பெய்தல் மூலமாக தெரிவிக்கிறது. அதுவே முதல் மாதவிடாய். ஒரு சிறுமி எப்பொழுது பூப்பெய்துகிறாரோ அப்பொழுதே அவள் ஒரு மங்கை ஆகிறாள். ஒரு குழந்தையை ஈன்றெடுக்க கூடிய அனைத்து அம்சங்களும் பெற்ற ஓர் உயர்ந்த நிலையை அடைகிறாள்.
பெண்குழந்தை உடைய தாய்மார்கள் கண்டிப்பாக பூப்பெய்தல் பற்றி அவர்களிடம் 9 வயதிலிருந்து பேசத் தொடங்கலாம். இதனைப் பற்றி தன் பிள்ளைகளிடம் விவாதிக்க சிறிதும் தயங்கக் கூடாது, அவர்களே வந்து நம்மிடம் கேட்கட்டும் என்றும் காத்திருக்கக் கூடாது. 9 வயதிற்கு மேல் நம்முடைய குழந்தைகளிடம் நாம் நட்புடன் இருப்பது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் மனம் விட்டு நம்மிடம் அவர்களுடைய சந்தேகங்களை கேட்பார்கள் நாமும் அதனை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி இல்லாமல் நாம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டால் பிறரிடமும் கேட்க முடியாத சில சந்தேகங்களை கூட நம்மிடம் கேட்க தயங்குவார்கள். நாளடைவில் நண்பர்கள் மூலமாக அவர்களுக்கு தேவையற்ற பல விஷயங்களும், அதைப் பற்றிய தவறான கருத்துக்களும், புரிதல்களும் பெறும் வாய்ப்பு அமையலாம்.
ஒரு தாய் தன் குழந்தையிடம் இதை ஒரு பாட சம்பந்தமான விவாதமாகவே ஆரம்பிக்கலாம். உடல் வளர்ச்சி, உணவு செரிமானம், இருதய செயல்திறன், ரத்த ஓட்டம் போன்றவற்றை விவாதித்து பின் எவ்வாறு ஒரு பெண் பூப்பெய்கிறாள் என்பதையும், அதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் மிகத் தெளிவாக விவாதிக்கலாம். அதுமட்டுமின்றி அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு ஒரு பெண் தன் உடலை மிகவும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி ஆரோக்கியமானதாக நம் உடலை மாற்றிக் கொள்ள எந்த மாதிரியான உணவு முறைகளை கையாள வேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் நாம் சிறிது சிறிதாக அவர்களுக்கு எடுத்துக் கூறலாம். இப்படிக் கூறுவதால் பொதுவாக அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைப்பற்றிய நல்ல ஒரு அறிவு கிடைப்பது மட்டுமல்லாமல் இதன் மேல் உள்ள இனம் புரியாத பயமும் நீக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது நாம் எப்படி அந்த சூழ்நிலையை கடந்து வந்தோம் என்பதனையும் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் புரிய வைக்கலாம். இதனால் நம்முடைய பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்தல் என்றால் உண்டாகும் பதட்டம் வெகுவாக குறையும். தன் தாயிடம் தனக்குத் தோன்றும் சிறிய சிறிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கையும் ஏற்படுகிறது. அதுவே 12 வயது பெண் குழந்தை என்றால் நாம் சிறிது விலாவரியாகவே பூப்பெய்தல் பற்றியும் அதனால் ஒரு பெண் தாய்மை அடைவதற்காக அவள் உடல் எப்படி தயாராகிறது என்பதைப் பற்றியும் மிக தெளிவாகவும், அறிவு சார்ந்த பல விளக்கங்களையும் எடுத்துக் கூற முடியும்.
இறுதியாக அவர்கள் இன்னும் குழந்தைகள் தான் என்பதை பெற்றோர்களாகிய நாம் மறந்துவிடக்கூடாது. கொடுக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை தாண்டி அதிகமாக எந்த ஒரு விஷயத்தையும் புகட்ட கூடாது. இது அவர்களுக்குள் ஒருவித இனம் புரியாத பயத்தை ஏற்படுத்திவிடும். அவர்கள் அவர்களுடைய குழந்தை பருவத்தை அமைதியாக, மிக இனிமையாக அனுபவிக்க நாம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
1 Comment